சனி, 6 ஆகஸ்ட், 2011

நிரூபணம்

ம. காமுத்துரை

 

ஊம்...?_வினாவை எழுப்பியபடி, வந்த பில்லை கல்லாவில் வாங்கிப்போட்டார் செல்லப்பா, அம்பது காஸ் சில்ற இருக்கா...?

சட்டை சேப்பையும் உதட்டையும் ஒருசேரப் பிதுக்கிய வாடிக்கையாளர்- கல்லாவின் மீதிருந்த வறுத்த சோம்பை அள்ளி வாயில் போட்டுக் கொண்டார்.

வழக்கம் போல சில்லரைக்கு மிட்டாய் கொடுத்து கணக்கை முடித்தார்.

“எல்லாக்கடைலயும் முட்டாய் குடுக்க ஆரம்பிச்சுட்டீங்க. ஒரு நாலிக்கு மொத்தமாச் சேத்து, பில்லுக்கு துட்டுக்கு பதிலா முட்டாய தரப் போறேம் பாருங்க...”- வாடிக்கையாளர் சிரித்தபடி சொல்லிக் கொண்டே வெளியேறினார்.

ராமநாதன் உட்காரவில்லை. மனசுக்குள் அலை அடித்துக் கொண்டிருந்தது. முச்சுகாற்றில் வெப்பத்தின் நிலை தாறுமாறாக இருந்தது. பெருமுச்சாய் வேறு வெளியேறிக் கொண்டிருந்தது. வியாபாரத்திற்கு இடைஞ்சலில்லாமல் அண்ணனின் இடது புறம் நின்றிருந்தான். பக்கத்தில் அவனுக்கான இருக்கை இன்னமும் காத்திருந்தது.

”ஒக்கார்ப்பா...”- அடுத்தது பில்கள் வரிசையாய் வந்து கொண்டிருந்தன. காலை டிபன் முடிந்து வடை, பக்கோடா நேரம் அண்ணன் கடைப் பக்கோடாவிற்கு தேனி பசாரிலும் கூட வாடிக்கை இருந்தது. ’செல்லாப்பா கூட பக்கோடாவா... இம்புட்டு வெலச் சொல்லி’ என்று அடுத்தகடையில் ஓப்பீடு செய்யுமளவு அதன் ருசி பிரபலமானது.

“பக்கோடா... ரூபை த்ரி பீ, செட் ஒண்ணு”

”பக்கோடா- காப்பி..” –என்ற குரல்கள் கலகலவென நலித்த வண்ணம் இருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் மதிய சாப்பாடு துவங்கி விடும். அந்தக் கூட்டம் இதை விட கூடுதல்கடை அள்வான கடைதான். அய்ந்து டேபிள் போட்டிருக்கிறார். பெரும் பாசம் மதிய சப்பாட்டுக்கு இடம் பிடிக்க வெளியில் ஆள் நிற்கும்.

ராசி என்றார்கள். இத்தனைக்கும் சாமிபடம் கல்லாவிற்கு நேர் மேலே பிரம்மாண்டமாய் பெரிசாக்கப்பட்ட வேட்டைக்கருப்பு ஒரேபடம் தான். மற்றபடி ஹோட்டல் சுவரெல்லாம் அண்ண்னும் தம்பியுமான அரசியல் வாழ்க்கைப் பயணத்தின் ஆதாரங்களாய் நிற்கும் புகைப் படங்கள். இருப்பு வெள்ளை துவங்கி லேமினேசன் காலம் வரை வரலாது சொன்னது. அனேகமாய் அடுத்த தேர்தலில் தம்பி வார்டு கவுன்சில ஞாகலாம், வாய்ப்பு உள்ளது. அதற்கான் ஆயத்தல் பணிகள் அன்றாட அஜெண்டாவில் தவற விடுபது கிடையாது.

“வீட்டுக்கு எப்ப வருவ...” அவனுக்கே தெரியும் மதிய சாப்பாடு முடியும் தருவாயில் தான் வந்து அய்ந்து மணிக்கு மேல் மறுபடி துணாக்கு கிளம்பும் என்பது. ஏதாவது பேசவேண்டுமே..

“யே என்னாச்சு..?”

”நீ இப்ப வீட்டுக்கு வர்லேன்னா.. அவள (மனைவி சாந்தி) சீமெண்ணய ஊத்திக் கொளுத்தப் போறேன்..!” உள்ளிருந்த உக்ஷ்ணத்தின் காரணமாய் வார்த்தைகள் சத்தம் மிகுதியாய் வெளிப்ப்ட்ட, வாடிக்கையாளர்களில் சிலர், திரும்பிப் பார்த்தனர்.

“நா என்னா செய்யணும்ங்கற.. தீப்பெட்டி வாங்கித்தரட்டுமா, இல்ல மண்ணெண்ண வாங்கி வரணுமா..?” கல்லாவில் சாய்ந்தபடி ஆசுவாசப்படுத்திக் கொண்டு கேட்டார். சில்லரை தரும் போது குனிந்து கொண்டே இருப்ப்து ரெம்ப்ச் சிரமம.

அண்ணன் பேச்சு அவனுக்கு அசதியைக் கொடுத்தது, சோர்ந்து போய் ஸ்டூலில் உட்கார்ந்தான்.

“பின்ன என்னா கொல்லப் போறே கொளுத்தப் போறேன்னு வாய்க்குவாய் பேசிட்டேதான் இருக்க..!”

“நெசமாவே கொள்ளச் சொல்லுறியா ...?”

“ஆகுற பேச்சத்தான் பேசணும்ங்கறேன் அரசியல்ல கத்தியக் காட்டிலும் புத்திதேம் பெருசு.. ’பெருசு’ பாட்டக் கேட்டு இருக்கீல்ல..அதனால வார்த்தயக் கொற..!”

ம்றுபடி சட்டென எழுந்த ராமனாதன், “நீ இப்ப கல்லாவுல மொதாலாளியா ஒக்காந்துருக்க நான் நிண்டுக்கிட்டிருக்கேன் இப்ப பேச்சு சுத்தப்படாது. நீ மொதல்ல வீட்டுக்கு வா.. “ – செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினான். வழக்கம் போல , அவனும் ’தலைவரும்’ சிரித்துப் பேசியபடி இருக்கும் போட்டோ கண்ணில் பட்டது. அந்த ஒரு போட்டோதான் அவனது இன்றைய உயரத்திற்கு ஆதாரம்.

“குற்றாலத்துக்கு என்னிக்குப் போகணுமாம்..?” – அண்ணன் கேட்டார்.

“தெரீல.. நகரத்ததேங் கேக்கணும்.. இன்னைக்கின்னாரு.. நாலைக்கின்னாரு..எப்பிடின்னாலும் ஒருநா ரெண்டுநாள்க்குள்ளார கெளம்ப வேண்டியிருக்கும்.!” – சொல்லிக்கொண்டே கரைவேட்டியை இழுத்துவிட்டபடி நடந்து மோட்டார்வண்டியில் ஏறினான்.

பி. சி. என்று செல்ல்மாய் அழைக்கப்படுகிற பி. செல்லப்பா, தன் அரசியல் வாரிசாக தம்பி ராமனாதனை இறக்கி விட்டிருந்தார். ஒரு காலகட்டம்வரை ஊருக்குள் பி.சி. யைத் தெரியாத பேர்கள் கிடையாது. தாலுகா முழுக்க போலீஸ் ஸ்டேசனிலிருந்து தாசில்தார் அலுவலகம் வரைக்கும் பெரிய செல்வக்கு பரவி இருந்தது. ஓரளவுக்கு மந்திரிவரைக்கும் கூட பழக்கம் வைத்து இருந்தார். கூடவே காப்பிக் கடையும் இருந்தது. சம்பளாஆள் வைத்து ஓட்டிக் கொண்டிருந்தவர், ஊருக்குள் இருந்த கடையை ரோட்டுக்கு மாத்தினார். கடையும் சொந்தக்கடையாகிப் போனது.

அப்போது இளைஞரணி உருவாக்கப்பட்டது. அதில் பி.சி.க்கு கருத்து மாறுபாடு இருந்தது. “கட்சிய வளத்து விட்றது ஓராளு, காபந்து பண்ணவாரது ஓராளா..? – இளைஞரணியை அவரால் ஏற்க முடியவில்லை. சிறுபயல்கள் தனக்குச் சமதையாய் வந்து நிற்பதும் சில சமயங்களில் கேள்விபோல கேட்டு தன்னை ஆளுமை செய்வதும் அவரால் அனுமதிக்க முடியவில்லை. அதற்காக கட்சியை விட்டு ஒதுங்கவும் இல்லை.

தன்னளவில் காப்பிக்கடையிலேயே தனது அலுவல்களைச் சுருக்கிக் கொண்ட்டார். கட்சி வேலைகளையும் காப்பிக் கடைக்குள்ளேயே அடங்கும்படி அமைத்துக் கொண்டார். தனது விசுவாசி களின் வேண்டுகோளுக்காக தம்பி ராமனாதனை அவர் கட்சிக்குத் தரவேண்டியதாயிற்று.

படிப்பு வராமல் எட்டாம் வகுப்போடு வீட்டிலிருந்த எருமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். காப்பிக் கடைபாலுக்கு அலைச்சலில்லாமல் இருந்தது. ஆனால் சோக்காளி களோடு சேர்ந்து, ’ரிக்கார்டு.டான்ஸ்’ ஆட்டத்திற்குப் போவதுதான் இடைஞ்சலாய் இருந்தது. அவனைத் திருத்தவும் ஒரு வழி தேடிக்க் கொண்டிருந்தார்.

இளைஞரணிக்கு பொருத்தமாகவும் இருந்தான். கட்சியில் சேர்ந்தபின்னும் அவனால் டான்ஸ் கச்சேரியை விட்டு வரமுடியவில்லை. அதனால் மேடைகளில் கட்சிக் கொடியோடு ஆடலானான். அது கட்சிக்குத் தேவையாகவும் இருந்தது. வெகுசீக்கிரத்தில் கட்சியில் பிரபலமாகியும் விட்டான். கட்சிமேடைதோறும் அழைப்பும் வந்தது ஆனால் பனம் பெயரவில்லை. அந்தநேரத்தில்தான் சாந்தியுடனான நட்பு துவங்கியது. அவளோடு இணையாக நடனம் ஆடவந்த பெண். சினிமா நடிகைகளுக்கு ஒப்பாக ஆடத்தெரிந்திருந்தாள். நட்பு காதலாய் மாற, அவலையே கல்யாணம் செய்ய வேண்டுமென அண்ணணிடம் த்ன் விருப்பத்தைத் தெரிவித்தான், ராமனாதன்.

சந்திக்கு ஏற்கனவே மணமாகி விட்டதாகவும், மேடைப் பழக்கத்தில் பலருடன் ’நட்பு’ இருஒப்பதாகவும் வந்த தகவல்களைத் தம்பியிடம் தெரிவித்தார் பி.சி.

“தின்ன சோத்துக்கு வெஞ்சனம் கேக்க ஆரம்பிச்சா எதுனச்சும் வெள்ங்குமா..? – வேதாந்தம் பேசினான். திடீரென தண்ணியைப் பொட்டுக் கொண்டு, “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி..” – என்று பாடவும் செய்தான்.

சொந்தபந்தங்களைக் கொண்டு அவன் மனசை மாற்றயோசித்த போது, மருந்து குடித்துச் செத்து விட்ப்போவதாய் பயம் காட்டினான். ஒரு நாள் எத்னையோ குடித்து ஆஸ்பத்திரிக்கும் போய்க் கிடந்தான்.

வீரபாண்டி ஈஸ்வரன் கோவிலில் வைத்து அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர கட்சியில் மகளிரணி உருவான போது சாந்தி அதில் முக்கியப் பொறுப்பில் இணைக்கப்பட்டாள்

முதல் குழந்தை பிறக்கும்வரை ஆட்டத்திற்குப் போனவர்கள், பிற்பாடு ஆட்டோ விளம்பரத்திற்கு மட்டுமே போகலானார்கள். படிப்படியாய் சாந்தி ‘ஹவுஸ் ஒய்ப்’ பாய் மாறிக் கொண்டாள். ராமனாதன் வார்டு செயலாளராய் பதவி வாங்கினான். அதில் தனது செல்வாக்கு தொடர்ந்து நீடித்திருப்பதில் பி.சி.க்கு சந்தோசம். ஆனால், ராமனாதனின் குடும்பத்தில் அமைதியை கொண்டு வருவதில் சிரமப்பட வேண்டிஇருந்தது. காதல் கல்யாணம் பூராவும் இப்படித்தான் இருக்குமோ, என்று பேசும்படி ஆகிவிட்டது. தினசரி பிரச்சனைகள், சண்டை, சமயத்தில் அடிதடி, பிள்ளைகள் மூன்று பேரைப்பற்றிய கவலையற்ற தடிமனான ஏச்சுப் பேச்சுக்கள்.

மதியச் சாப்பாட்டு அரிபரிகள் ஓய்ந்த நேரத்தில் தாமதிக்காமல் வீடுவந்து சேர்ந்தார் பி.சி. வேட்டி மாற்றி கைலிக்குள் புகுந்து, சாப்பிட உட்கார்ந்தார். சாந்தி வீட்டுக்குள் நுழைந்தாள்.

“வா ..! – வாய் நிறைய சோத்துப் பருக்கையோடு அவளை பி.சி. வரவேற்க, அவரது மனைவி யோ பார்வையிலேயே அழைப்பு விடுத்தார்.

வரவேற்புகளைப் பொருட்படுத்தாதவளாய் சாந்தி, ஓரமாய்க்கிடந்த பைபர் சேரை இழுத்துப் போட்டு பி.சி. க்கு முன்னால் அமர்ந்தாள்.

கனகாம்பரக்கலர் மெல்லிசான சேலையில், கைக்கு மட்டும் கரைவைத்த சட்டையுமாய் காற்றில் அலைந்த கூந்தலுமாய் ஓவியமாய்த் தெரிந்தாள். கல்யாணத்தில் இருந்ததைவிட இப்போது சற்றுப் பூரித்திருந்தாலும், சிவப்பும் வாளிப்புமாய் தளதளப்பாய்த்தான் இருக்கிறாள். யாரையும் சட்டென ஒருகணம் ஸ்தம்பிக்கச் செய்யும் உடல் வாகு.

“என்னா பிரச்சன சாந்தி..?” - லயிப்பிலிருந்து விடுபட்டு பி.சி. கேட்டார்.

உடனடியாய் அதற்குப் பதில் சொல்லாமல் அவரை உற்றுப் பார்த்த சாந்தி, “உண்மையிலயே ஒண்ணும் தெரியாதா மாமா..! “ – எனக் கேட்டாள்.

“ம் .. சொன்னான், ,” என்றவர் , மனைவியிடம், “ தயிரு வேணாம் மோராக்கிக் கொண்டா..” தட்டு நிறைய சாப்பாடு முங்கமுங்க மோரை ஊற்றிப் பிசைந்து, புறங்கை வழியவழிய உறிஞ்சி உறிஞ்சிச் சாப்பிட்டார். கையைக் கழுவி எழுந்தவர், வேட்டிமுனையில் துடைத்துக் கொண்டே தமது அறைக்கு வந்தார். பின்னாலேயே சாந்தியும் நுழைந்தாள். அந்த அறையிலும் கடையில் மாட்டி இருந்ததைப் போல தலைவர்களுடனான போட்டாக்கள் அவரது இருப்பை உறுதிப் படுத்தும் விதமாய் சுவரை அடைத்துத் தொங்கின.

”சாந் தீ...ரெண்டுபேரும் லவ் பண்ணி கல்யாணம் முடிச்சவங்க..பிரச்சனை எப்பவும் உங்களத் தாண்டி வரக்கூடாது...ஆனா எப்பப்பாத்தாலும் பஞ்சாயத்து பஞ்சாயதது.. னுதேன் வந்து நிக்கிது...!”

”வெக்கமாத்தெ மாமா இருக்கு..! செத்துக் கூடப் போயரலாம்னுதே தோணுது..! “

“ ம்..அதத்தே அவ்னுஞ் சொல்றான்.. ” – தம்பியை விட்டுக் கொடுக்காமல் பேசினார்., “வாழ்றதப் பத்தி யோசிக்கணும்..!”

“வாழணும் மாமா..ஆனா இப்பிடி அசிங்கமா வாழணும்ன அவசியம் இல்ல..!” சொல்லும் போதே புருசன் மீது கோபம் பொங்கிப் பெருகியது. ஒருகணம் அவனை எரித்துக் கூட விடலாமா என்று தோன்றியது.

படுக்கையில் காலைத் தொங்கவிட்டு கைகளைப் பின்புறமாய் ஊன்றிக் கொண்ட நிலையில் பி.சி. பேசலானார். “இங்க வாரு சாந்தீ.. ! நீயும் அவனும் எல்லாரையும் போல இல்ல, ரெண்டுபேருக்குமே அரசியல் தெரியும். சமயத்தில அட்ஜஸ் பண்ணித்தே ஆகணும். இல்லாட்டி நீடிக்கமுடியாது..!”

சாந்திக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இவரும் அட்ஜஸ் பண்ணத்தான் சொல்றாரே.. , “மாமா.. ஒங்கள என்னோட அப்பாவா நெனச்சு வந்து ஒப்பிக்கிறேன். நீங்களும் இப்பிடி.. ?”

‘ உஸ்...இதெல்லாம் மேடைல பேசத்தேன் நல்லா இருக்கும், ஒண்ணு சொல்லட்டுமா, மேடைல ஆடுனதக்க் காட்டிலும் இது ஒண்ணும் அசிங்கமில்ல தெரிமா..?” – என்றவர், “ ஆண்டவா.. இதெல் லா நாம் பேசக்கூடாது. ஏற்கனவே அவெங்கிட்டச் சொல்லி இருக்கேன். எந்தப் பிரச்சனையும் நீங்களே பேசிக் கங்க டான்னு. பெட்ரூம்ல தீக்க வேண்டியத ...” பி.சி. யின் வர்த்தைகள் ஒவ்வொன்றும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வார்ப்பு போலத் தெரியவந்தது சாந்திக்கு. அரசியல் என்று சொல்லிச் சொல்லியே சகலத்தையும் சாக்கடைக்குள் தள்ளுகிற காரியத்தை திறம்படச் செய்கிறார்கள் .தன் கனவுகளைப் பூராமும் காவு கொடுத்து வந்தாயிற்று. காதலித்தது தப்பா.... என்று பலமுரை கேட்டுக் கேட்டு அலுத்துப் போயிற்று. இத்தனை வருச தாம்பத்திய வாழ்க்கையில் அறிந்ததைவிட இந்த நொடிப் பொழுதில்தான் சன்னல்கள் திற்ந்தகொண்டதாய் உணர்ந்தாள். காதலை எப்படியெல்லாம் வியாபாரம் செய்யலாம் என்ற சூட்சுமம் மிக்க ஒரு குடும்பத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்...! ஆனாலும் போராடாமல் தீராது...

“வெவரம் தெரியுமா மா மா.. ? “என்னா வெவரம்..? நகரச் செயலாளர் கூட ஒன்னிய குற்றாலத்துக்குப் போகச் சொல்றான் அதான?” ஊன்றிய கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டார். “இன்னிக்கி அரசியல் தெரியுமா..? முந்தியெல்லாம் ஓட்டுக்கு நாம பணம் கொடுப்போம்... இப்ப.., அய்நூறு ஆயிரம்னு ஓட்டுப் போட்றவெ பேரம் பேசுறான்.! எந்தம்பி கவுன்சிலராகணும்ங்கற ஆச எனக்கும் இருக்கும்ல.. செயிச்சிட்டான்னா சேர்மன் ஆகவும் சான்ஸ் தாரதா ’நகரம்’ உத்தரவாதமாப் பேசறாரு..! என்னா பேமிலி டூருதான...”

விக்கித்துப் போன சாந்தி, விருமுட்டி அடைந்தவளாய் வெளியேறினாள்.

வீட்டில் மண்ணெண்ணெய்க் கேனுடன் ராமனாதன் உட்கார்ந்திருந்தான். கண்கள் சிவந்து முழுப் போதையிலிருப்பதைச் சொன்னது.

“நீதி கேட்டுட்டு வர்றியாக்கும்..?”

பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய் விட்டதால் வீடு வெறிச்சென இருந்தது. மதிய உணவிற்குப்

பிறகான வேளை என்பதால் வீதியும் ஆளோடிக் கிடந்தது.

பேசாமல் அவனைக் கடந்து வீட்டுக்குள் சென்றாள்.

“நீ எத்தினிபேருக்குப் பத்தினிங்கறது எங்களுக்கும் தெரியும்..!”

அவளுக்குத் தலை விண் விண்ணெனத் துடித்தது. “தம்பி பொண்டாட்டி ங்கறதால நானே என்னிய அடக்கிக்கிட்டேன்..தெரியுமா ஒனக்கு...?” – பி.சி. ஒருதரம் ஹாஸ்யம் போலப் பேசியது சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது.

“என்னா சொன்னாரு அந்த பி.சி...? அந்த தேவ்டியாப் பயலக் கொன்னுட்டு எங்கிட்ட வான்னாரா? இந்தா..பத்துலிட்டர் சீமெண்ணெ இருக்கு ஊத்து , ஊத்திக் கொளுத்திப் பத்தவையி.. ” – மண்ணெண்ணெய்க் கேனுடன் எழுந்து வந்தான்.

சாந்தி பேசவே இல்லை. தலைகுனிந்தபடியே இருந்தாள்.

“என்னா...? .சோகம்.....! ஆக்டிங்கு..?..நீ உம்மையிலயே பத்தினின்னா.., இந்தா இத உம்மேல ஊத்திக்கிட்டு பத்தினிங்கறத நிருவி ..! பத்தினிகிட்ட நெருப்பே பயக்குமாம்ல..இந்தா ஊத்திக்க, ஊத்திக்க...!”

நிஜமாகவே மூடியைக் கழற்றி அவ்ளது தலைக்கு மேலாக எண்ணெய்க் கேனை தூக்கி ஊற்ற முயன்றான்.

வெறிகொண்டவளாய் கேனைத்தட்டிவிட்டாள் சாந்தி.

வீடெங்கும் நெருப்பு திகுதிகுவென எரிந்தது. ராமனாதன் அலற அலற அவனை நழுவவிடாமல் இறுகப் பற்றி எரிந்தது நெருப்பு.

------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக