சனி, 6 ஆகஸ்ட், 2011

மடிவாசம்

ம . காமுத்துரை

“விபூதித்தட்ட எங்கிட்டுட்த்தே வச்சீக..யேவாரத்துக்குப் போறநேரத்தில இப்பிடியா..? “ – ஆவுடையப்பன் அவதியெடுத்துக் கத்தினான்.

வீட்டுக்குள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிற வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது.

“எல்லார்ர்க்கும் காது அவுஞ்சி போச்சா..? “உள்புறம் திரும்பி திரும்பவும் சத்தம் குடுத்தான்.

“இங்க என்னா பூசாரி வேலையா நடத்திக்கிட்டிருக்கம்..முழிச்சுப் பாத்துத் தேடுனாக் கெடைக்கும். “. – உள்ளிருந்து சம்சாரத்தின் பதில் வேகமாய் வந்து விழுந்தது.

“திமுறு ஏறிப்போச்சூ..! “ – உரக்கச் சொல்லிவிட்டு, ஏழுமலையானின் படத்தைத் தொட்டுக் கும்பிட்டு கொண்டான். மறுபடியும் சுவரில் அறையப் பட்டிருந்த மரஸ்டாண்டில் தேடினான். அதன் கீழ்த்தட்டில் குனிந்து பார்த்தான். காலடியில் – தரைத் தளத்திலும் காணவில்லை. சாமி படத்துக்கு அடியில், எரிந்து நின்ற – சாம்பிராணி வில்லையின் சாம்பலை நசுக்கி, நெற்றியில் திருநீறாக இழுகிக் கொண்டான்.

செருப்பை மாட்டிக் கொண்டு வாசலுக்கு வந்தான்; அங்கே அம்மா பல் தீத்திக் கொண்டிருந்தது. வசல் படிக்கட்டில் விபூதித் த்ட்டு வீற்றிருந்தது. “ காணாஙகாணாம்னு அங்கன லாவிக்கிட்டிருக்கே. இந்தா இருக்குடான்னு ஒரு வார்த்த சொல்லலாம்ல..- அப்படியே அம்மா மீது பாய்ந்தான்.

“பல்லுதித்த பொடியக் காணாம் அதேன் திண்ணீர எடுத்தாந்து பல் வெளக்குணே..என்னாவாம்.?

புளிச்செனசாக்கடையில் எச்சிலைத் துப்பிவிட்டு நிதானமாய்ப் பதிலைச் சொன்னது.

“ச்சே.. காலைல சமி காரியத்தக் கூட சண்ட போட்டுத்தான் நடத்த வேண்டி இருக்கு..”- முனங்கினான்.

“யே என்னா மொனங்கலு.. சாமீன்னு மனசுல நெனச்சாப் போதும்டா.. பாலாபிசேகம் ப்ண்ணாத்தே கூடவரும்னா அதுசாமி இல்ல..” என்றவர், “பொழப்புக்குப் போறப்ப பொலம்பாமக் கெளம்பு..” – அம்மாவிடம் எல்லாத்துக்கும் பதில் தயாராய் இருக்கும்.

சைக்கிளில் – ஊதுபத்தி பாக்கட்டுகள் – பெரிய பைகளீல் அடுக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தன. நல்லவேளையாய் சைக்கிள் சாவி சட்டைப் பையிலேயே இருந்தது. பூட்டைத் திறந்ததும், சீட்‘டில் படிந்திருந்த தூசியைத் தட்டித் துடைத்தான்.

“டெய்லி தொடச்சாத்தே என்னாவாம்..தூசியப் பாரூ..கோலப்பொடி விக்கிற வண்டியிலயுங் கேடாவுல்ல இருக்கு”சொல்லிக்கொண்டே வாய் கொப்பளித்து முடித்தது. இவன் சைக்கிளின் ஸ்டாண்ட் கிளிப்பை விலக்கி சைக்கிளை உருட்டியதும், வழக்கம் போல அம்மா, சுருக்குப் பையிலிருந்து காசை எடுத்துக் கொடுத்தது.

திடீரென அவ்னுக்கு வெட்கம் வந்தது.”வேணாம்மா.. ஏங்கிட்ட இருக்கு..!” சைக்கிளை மெல்ல நகர்த்தினான். இல்லாத சமயம் அம்பது நூறு என்று வாங்கிக் கொள்வான். – பொடிபொட்டுப் பாத்திரங்களை அடகு வாங்கிப் போட்டும், அன்றாட ஏவாரத்திற்குப் போகும், காய்கறி ஏவாரி களுக்கு (தள்ளுவண்டி) நூறு இருநூறு என நாள் வட்டிக்குக் குடுத்துவாங்கியும் அம்மா குடும்பத்திற்கு அரணாய் நிற்கிறது.

“சும்மா வாங்கிக்கடா..” நீட்டியபடியே இருந்தது.

“காலம்பறவாற சீதேவிய வாணாங்காதீங்யா..” – கீரை வாங்க்க் கொண்?டுபோன செண்பகத்து மதனி மெனக்கிட்டு நின்று சொன்னது.

அம்மாவின் பிடிவாதம் அவனுக்குத் தெரியும். பள்ளீக்கூட நாளிலேயே, எத்தனை வறுமை இருந்தாலும் அவனது பையில் காசு போட்டுத்தான் அனுப்பும். “காலி வகுத்தோட நடந்தாலும், பையில காலணாக் காசோட நடந்தம்னு வையி.. நடையே ஒரு கெம்பிரிக்கமாத்தே இருக்கும்..!”

ஆனாலும் நாப்பது வயசுக்குப் பிறகும் கூட அம்மாவைத் தொந்தரவு செய்கிரோம் என்கிற குற்ற உணர்ச்சி ஒவ்வொரு நாளும் குறுக்கிடுகிறது.

ஒருவேளை அம்மா, தன்னை அவரது பிக்குள் வைத்திருக்கத்தான் இதனைச் செய்கிறதோ என்று வினோதமான சிந்தனை சில நேரம் புறப்படும்.சமயத்தில் மனைவியிடமிருந்தும் அந்தச் சாயலில் வார்த்தைகள் விழும். அப்போதெல்லாம் அதனை ந்வன்மையாய் மறுத்திடுவான்.

“ஆமா.. நானும் அய்யேயெஸூ ஆவீசரு என்னிய த்ன் பிடிக்குள்ளாற வச்சு, மிச்சமிருக்க மக்கமாரக் கரசேக்கப் போகுது...போடீ..”

அம்மாவும் கூட அவன் சொன்ன வர்த்தைகளையே வேறொரு விதமாய்ச் சொல்லக் கேட்டிருக்கிறான். “அட நாங்குடுக்கிற நாலுகாசுலதே அவன் நாளத் தள்ளப் போறான்..! என்னத்தியோ..ஒரு ஆச..பாசம்.. பெத்ததுக்கு நம்மனால யேண்டதச் செய்யறமேன்ன ஒரு நெனப்புத்தே..! “

அந்த வர்த்தையிலிருக்கும் பிரியத்திற்கு என்ன மாறு செய்யப் போகிறோம் என்ற கேள்விதான் பதிலின்றி அலைந்து கொண்டே இருக்கிற்து.

“அது முடியாதப்பா..ஆவுட, பெத்தமனசுகிட்ட மட்டும் , பொறந்தது அப்பவுமே தோத்துதான் போகணும். வேணும்ணா.. வாங்குற துட்டுல அவங்களுக்கு ஆகுற மாதிரி எதாச்சும் பொருளோ தீம்பண்டமோ வாங்கிக் குடுத்து நேர் செய்துக்கிடலாம். நா அப்பிடித்தே..” –அவனுக்கு உற்ற துணையாய் இருக்கும் கருப்பையா செட்டியார் சொல்வார்.

ஆனால் அதைக் கூட நிரைவேற்ற முடியவில்லை. காசு வருகிற வழி துல்லியமாய்த் தெரிகிற மாதிரி போகிற பாதையைக் கணிக்க முடியவில்லை.

ஒரு நாளாவது அம்மாவைக் குளிரச் செய்கிற மாதிரி செய்திட வேண்டும். மனதில் சங்கல்பம் ஏறிட அந்த நினைப்பிலேயே அன்னஞ்சி வடபுதுப்பட்டி.. சக்கரைப்பட்டி வரை சைக்கிளை மிதித்தான் .

எதிர்பாராதவிதமாய் இன்று ப்ழைய பாக்கிகளெல்லாம் வசூலாயின. கூடுதலான சரக்குகள் வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் ; கார்த்திகை – மார்கழியில் ஒரு சீசன் ஏவாரம் துவங்கும். அது இன்றைக்கு – தான் நினைத்தநாளில் – கைகூடியது சந்தோசமாய் இருந்தது.

வியாபாரம் முடித்துத் திரும்புகிற போது வழக்கமான பாதையினைத் தவிர்த்து, தேனிப் பக்கமாய்ச் சுற்றித் திரும்பினான். நகராட்சி அலுவலகம் எதிரில் வடநாட்டு ஆசாமிகள், சால்வை குல்லா, மப்ளர்..என்று, தள்ளுவண்டியில் அடுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். கண்ணைப் பறிக்கும் விதமாய் ஒவ்வொன்றும் இருந்தன. அறுநூறு விலை சொன்ன சால்வை ஒன்றை இறநூறுக்கு பேரம் பேசி வாங்கினான். சைக்கிளில் அதனைத் தொங்கவிட்டு வருகையில், பெரியமனுசனாய் ஆகிப்போன திருப்தி.

”யாருக்குடா போர்வ..” – வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மா விரித்துப் பார்த்துக் கேட்டது.

“யேன் ஒனக்குத்தேன்.. பனியடிக்குதில்ல..? “ – அம்மாவின் முகம் பார்த்தபடி சொன்னான். எதிர்பார்த்ததுபோல அம்மாவின் முகம் அகல விரிந்தது. அப்போது உள்ரூமிலிருந்து நாலைந்து பெண்கள் வந்தனர். சால்வையின் வழவழப்பைத் தொட்டுப் பார்த்துச் சிலாகித்தனர். எதற்காக இந்தக்கூட்டம்...? வீட்டில் என்ன நடப்பு..? ஆவுடையப்பன் கேள்வியுடன் சுற்றும்முற்றும் பார்த்தான்

வீட்டின் மூலையில் அவனது மகள் சிங்காரமாய் அலங்கரிக்கப்பட்டு உட்க்கார்த்தி வைத்து இருந்தார்கள் . பக்கத்தில் உலக்கை...இன்னபிற மங்கலப் பொருட்கள் .....!

“கிறுக்குப் பய. . .இவெ எப்பவுமே இப்பிடித்தே.. நாயி...காசு வேணுமுன்னா நேரடியாக் கேக்கமாட்டயா..பெத்தவளுக்கே லஞ்சமாடா.. கிறுக்கா..! “ – அம்மா பெருங்குரலில் சொல்லிச் சிரித்தது, “கேணப்பயலே பேத்தி ஆளானா பெத்தவகளக் காட்டியும் எனக்குத்தாண்டா உறுத்து.. போடா போ.. ஓம் பொண்டாட்டிகிட்ட ஆயிரம் ரூவா குடுத்திருக்கே வாங்கி செலவப் பாரு...! “ – இயல்பாய்ப் பேசியபடி சால்வையை இறுகக் கட்டிக் கொண்டது அம்மா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக