ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

குல்பிஐஸ் விற்பவனின் காதல் கதை

”நீ என்னிய லவ் பண்றீயா.....?” -குல்பி ஐஸின் மேல் நுனியை பல்லால் சுரண்டிச் சுவைத்துக் கொண்டிருந்த ஹேமா கண்களை வீரியச் செய்தபடி கேட்டாள்.

ட்ரைசைக்கிளில் அமைத்திருந்த ஐஸ் பெட்டியிலிருந்து குல்பிகளை ரப்பர்பேண்ட் சுற்றி அடுக்கி கொண்டிருந்த அவன், எச்சிலை விழுங்கிக் கொண்டான். நல்லவேளை அந்தநேரம் தெருவில் யாரும் இல்லை , தூரதூரமாய்த்தான் வீட்டுவாசால்களீல் பெண்கள் அவரவர் பாடுகளில் மூழ்கி இருந்தனர். பள்ளி முடிந்து வந்த பிள்ளைகளுக்கு உடைமாற்றி விடுவதும், தனக்கு தலைசீவி, பேன் குத்திக் கொள்வதுமாய் அந்த மாலை நேரம் அவர்களுக்கு அமைந்திருந்தது.

தினமும் நாலுமணிக்கு அவன் இந்தத் தெருவைக் கடப்பான். அதுவரையில் பத்மநாபன் நினைவு ஆரம்பபள்ளியில்தான் வியாபாரம். பள்ளிக்கூடத்தில் மாலை நேர சிறுநீர் இடைவேளை முடிந்ததும் ஊருக்குள் வியாபாரம் செய்யக் கிளம்பிடுவான். எப்படி விற்றாலும் இரவு ஏழு – எட்டு மணிக்குள் சரக்கு தீர்ந்து விடும். அதற்குமேல் ஐஸ் பெட்டியிலும் குளிச்சி நிற்காது.

அவன் கடந்த ஆறேழு மாதமாகத்தான் ஐஸ் ஏவாரத்தில் இறங்கி இருந்தான். அதற்கு முன்பு, ‘பட்டறை இறக்கத்தில் இருக்கும் நூர்முகம்மது -வின் டூவீலர் மெக்கானிக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அது நல்ல்வேலை. இஷ்டத்துக்கு வண்டிகளை எடுத்துக் கொண்டு ஊர்சுற்றலாம். அந்தக்கடையில் சேர்வதுவரைக்கும் அவனுக்கு பைக் ஓட்டத்தெரியாது. நூர் அண்ணந்தான் கியர் வண்டி ஓட்டக் கத்துக்கொடுத்தார். பிரேக் டவுன் ஆகிக்கிடக்கும் வண்டிகளை எடுத்துவர ட்ரைவிங் முக்கியம். ஆனால் இன்றுவரைக்கும் லைசன்ஸ் மட்டும் எடுத்துத் தரவில்லை. ‘மெக்கனிக்’னு சொல்றா என சொல்லிக் கொடுத்திருந்தார். பல போலீஸ்காரர்களின் வண்டிகள் வேலை பார்ப்பதால் அவனுக்கு அந்தக் கடையில் இருக்கும் வரை பிரச்சனை வந்ததில்லை. ஒரு பிளக் ஸ்பானரும், கொஞ்சம் ரேக்தாள் பீசும், புது பிளக்கும் மட்டும் பையில் போட்டுக் கொடுத்து விடுவார். வண்டியை ஸ்டார்ட் செய்து எடுத்து வந்துவிடுவான்.

வண்டி ட்ரையல் பார்ப்பது எல்லாம் நூரண்ணந்தான், சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரும்போது மட்டும் அவனிடம் வண்டியைக் கொடுத்துவிடுவார். அந்த நேரத்தில்தான் அவன் மற்ற மெக்கானிக் கடைப் பையன்களோடு சேர்ந்து ரேஸ் விடுவதும், பைக்கில் பலவிதமான சாகசங்கள் செய்வதுமாகப் பழகினான். அந்த நேரத்தில் பசங்கள் ஆளுக்கொரு லவ்வர் வைத்திருந்தனர். அவனுக்கு மட்டும் செட்டாகவில்லை. அல்லிநகரம் வடக்குத்தெருவில் ஒருவண்டியை டெலிவரி கொடுக்கச் சென்றபோதுதான் அவனுக்கான ஃபிகரைக் கண்டான். துரதிஷ்டவசமாய் அந்தப் பெண்ணிடம் தனது பைக் சாகசத்தைக் காண்பித்து கொண்டிருந்த வேளையில், ஒரு ஆட்டோக்காரன் வினையாய் வந்து வண்டியை போட்டுவிட்டான். பெட்ரோல் டாங்க் சேதாரமாகிவிட்டது. செலவுகூடுதலான சேதாரம்.அதன்பிறகுதான் அவன், ஐஸ்வண்டியைத் தள்ளலானான்.

ஹேமாவைப் பார்க்க அவனுக்கு பயமாக இருந்தது. ’லூசா...?’ அழகான பிள்ளைதான் ரெம்பவும் சிகப்பு இல்லை சுத்தமான கருப்பும் இல்லை. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை போல ரெட்டைச்சடை போட்டு பவுடர் பூசி இருக்கும் பார்க்க நல்லா இருக்கும். சிலநாளில் முகத்துக்கு மஞ்சள் பூசி, வகிடெடுத்த உச்சியில் குங்குமம் வைத்திருக்கிற நாளில் கொஞ்சம் விகாரமாய் இருக்கும்,ஓரிரு வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்க்காமல் ஒற்றைச்சடை போட்டு கண்ணுக்கு மையிட்டிருக்கும் போது, காற்றில் பறக்கும் காதோர முடியில், ’அசின்’ மாதிரி ரெம்பவும் பிரமாதமாக இருக்கும்.

அவன் ஐஸ் ஏவாரம் ஆரம்பித்த நாளிலிருந்து இந்தத் தெருப்பக்கம் வரும்போதெல்லாம் தவறாமல் ஏவாரம் வாங்குகிறவர்களில் ஹேமாவும் ஒருத்தி. புளிக்கொட்டகையிலிருந்து ‘மனு’ கணக்கில் புளியை வாங்கி வீட்டில் வைத்து தட்டி. கொட்டை பிரித்து , பாக்கட் போட்டுக் கொடுக்கிற வேலை போலிருக்கிறது. எப்போது வந்தாலும் வலது கையும் இடதுகையும் கருப்பாக, பிசுபிசுப்பாகவே இருக்கும்.

“கையக் கழுவீட்டு வரலாம் மா....” – முதன் முதலாக ஹேமாவிடம் அவன் பேசிய வார்த்தை அதுதான்.

அவனது கேள்விக்குப் பிறகுதான் ஹேமா தனது கையை விரித்துப் பார்த்தாள். “நல்லாத்தான இருக்கு ..”-என்றாள்.

“ நல்லாருக்கா...? கரேல்னு ... திட்டுதிட்டா சகதிமாதிரி ஒட்டிக் கெடக்கு...பாரு ”-என்றான்.

“சகதி இல்ல அது , புளி...”-விரல்களை ஒன்றோடொன்று தேய்த்து படர்ந்துகிடந்த பிசுக்கைத் திரட்டிக் காண்பித்தாள்.

அதற்குமேல் ஒரு பருவப் பெண்ணிடம் பேசுவது நீதியல்ல, “சரி சரி’-என்றான்.

”இப்பக் கழுவுனாலும், ஐச தின்னு முடிச்சிட்டு,இன்னொருக்கா வேலபாக்கணும்ல...”- அவளாகவே பதில் சொன்னாள்.

முதலில் ஹேமாவையும் அக்கா என்று தான் ஏவாரப் போக்கில் கூப்பிட்டான். பிறகு ஒருநாள் கடன் வைத்த போது , அதனை வசூலிக்கும் நாளில் ‘யேம்மா...’ என்று விளிக்கவேண்டி வந்தது.

கடன் வாங்கிய நாளிலிருந்து ஹேமாவும் அவனோடு கூடுதலான நேரம் செலவழித்தாள் . அவன் அந்த வீதிக்குள் நுழைந்ததும் “ஐஸ் வண்டி வந்திருச்சு... ஆராருக்கு வேணும்...?’ –என்று வீட்டிலுள்ளோரை கணக்கெடுத்து வருவாள். முதலில் தெருக்காரர்களுக்கு ஏவாரத்தை கொடுக்கச் செய்வாள். அப்போது ஏதாவது பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருப்பாள். ஐஸுக்குள் உண்மையிலேயே பால் கலப்பாகளா ... எசன்சா,,, இனிப்புக்கு சீனியா, சாக்ரீமா... எவ்வளவு நேரம் பிரிஜ்ஜில ஓட விடுவாங்க ... எம்புட்டு வித்தா எவ்வளவு கமிசன், கமிசனா . சம்பளமா...? அட்வான்ஸ் குடுத்து சரக்கு எடுக்கணுமா... அப்பிடியே குடுத்து விடுவாங்களா..? அய்ஸ் விக்காம இருந்தா என்னா செய்வ...?

ஆரம்பத்தில் எல்லாக் கேள்விக்கும் பொறுப்பாய் பதில் சொன்னான் அப்புறம் அது தனது அந்தரங்கத்தை ரெம்பவும் சுரண்டுவதாய் ஃபீல் பண்ணினான். அதேசமயம் சடாரென வெட்டிப்பேசி ஒதுக்கிவிடவும் மனசு தயாராகவில்லை. சில சமயம் ஹேமாவின் பவுடர் வாசனை அவளது அருகாமையை விரும்பியது. அந்த நேரம் அவனது கால்கள் அவனை சட்டை செய்யாமல் ஹேமாவின் பக்கமாய் நகர்ந்துவிடும் . ஐஸ் பெட்டியை சரிசெய்வது போலவோ, அல்லது ட்ரை சைக்கிளின் சக்கரத்தை சோதித்துப் பார்ப்பதுபோலவோ பாவனை செய்து கொள்வான்..

“பணியாரத்தைக் குடுத்தா பிச்சுத்தேம்மா திங்கணும் , ஓட்டய எண்ணிப் பாக்கக் குடாது...” – என்று அண்ட பழசான உவமையைச் சொல்லி ஹேமாவின் கேள்வியை நிறுத்த முயற்சிப்பான்.

“ஒரு விசயத்த தெரிஞ்சுக்கிறது தப்பா....”- ஒரு கையை ட்ரை சைக்கிளில் ஊன்றி இடுப்பில் ஒரு கை வைத்து ஸ்டைலாய் கேட்பாள்.

”ஒன்னோட் வேலயப்பத்தி எப்பவாச்சுங் கேடருக்கேனா...?”

“கேக்கணும்யா.... ஒரே தொழிலே என்னிக்கிம் நிரந்தரமா ஓடீருமா...?

“அப்ப... நிய்யும் அய்ஸ் விக்கப் போறியா...? அய்ஸ் அய்ஸ்னு வீதில உன்னால சத்தம் போட முடியுமா...? “

“அய்ஸ் கம்பெனி வச்சா....?.. கத்த வேண்டியதில்லில்ல....” சொல்லிவிட்டு அன்று தான் பலமாய் சிரித்தாள் அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

இரண்டுபேரும் சேர்ந்து சிரித்து கொண்டிருந்ததை பார்த்து விட்ட பஞ்சு மிட்டாய் முருகன், சினிமா தியேட்டரில் வைத்து அவனிடம் கேட்டான். ”சூப்பர் பிகர பிடிச்சுட....!”

முருகனிடம் அவன் வன்மையாய் மறுத்தான்,”சத்தியமா அப்பிடி யெல்லாம்மில்ல....அது ஒரு லூசு...”

“ நிய்யினாப்ல...? நீ ஒரு லூசு ..... அந்த பிள்ள ஒரு லூசு.... ஜோடி செட்டாயிரும்ல.... நானும் ஊரெல்லாம் அலசுறே.... நமக்கு ஒண்ணும் அமய மாட்டேங்கிதே..... எப்பிடிடா அமுக்குன..?”

அதற்கு மேல் முருகனிடம் பேச்சுக் கொடுக்கவில்லை. தியேட்டரில் எவனாவது அந்த தெருக்காரன் அதைக்கேட்டு, பிரச்சனை வில்லங்கமாக ஆகி போனால் அடி தாங்க முடியாது. வீட்டில் அம்மா, செருப்பை எடுத்து விளாசிவிடும். அக்கா இருக்கிறது. தங்கச்சி படித்துக் கொண்டு இருக்கிறது. வேணாண்டா சாமி....

அந்த நாளிலிருந்து ஹேமாவை பார்க்கிறபோதெல்லாம் ஒரு குறுகுறுப்பு மின்னியதை தவிர்க்க முடியவில்லை அவனால். ஹேமாவும் நெருங்கி வருவது போலவே தெரிந்தது. தெருவுக்குள் வந்து நின்றவுடன் ஹேமா தானாகவே ஐஸ் பெட்டியைத் திற்ந்து ஒரு குல்பி குப்பியை எடுத்து, அதில் சுற்றி இருக்கும் ரப்பர் மூடியை அகற்றி. குச்சி எடுத்து ஐசுக்குள் சொருகி சுவைக்கத் தொடங்கி விடுகிறாள். அவன் அந்தத் தெருவை விட்டு கிளம்புகிறவரைக்கும் கூட பேசிக் கொண்டே இருக்கிறாள். அவனுக்கும் சில நேரம் பேச்சை நீட்டிக்க விருப்பமாய் இருக்கிறது. ஐஸ்வாங்க ஆள் வராவிட்டாலும் கூட மணியை அடித்துக் கொண்டே நின்றிருப்பான்.

இப்போது அவனும் ஹேமாவின் வேலை, வீட்டு நிலவரங்களைப் பற்றிக் கேட்க ஆரம்பித்துவிட்டான். ஹேமா எந்த தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னதில் அவனுக்குள் ஏதோ ஒரு அன்யோன்யம் ஏற்பட்டது போல உணர்ந்தான். காலையில் கண் முழித்து எழுந்ததில் இருத்து சாப்பாட்டு நேரம் தவிர, உறக்கம் வரை இடைவிடாமல் புளி தட்டுவதை அறிந்தான். சீசன்காலத்தில் அவசர மென்றால் ராத்திரி தூங்காமல் கூட முழித்திருந்து கொட்டை எடுத்த புளித் தோடுகளை பாக்கட் போட்டுக் கொண்டிருப்பார்களாம். எந்த நேரமும் வீட்டில் சுத்தியல் சத்தம் கேட்டு கொண்டே இருக்குமாம்.

”அஞ்சு சீவாத்திக கஞ்சி குடிச்சு காலந்தள்ளணும்ல...”-அந்தநேரம் ஹேமா கிழவியாகத்தான் பேசும் ,’அக்காவுக்கு சீரு, தங்கச்சிக்கி பள்ளி கூட செலவு, வீட்டு வாடக,கேபிளு.... நடுவால பொறக்கறது பெரிய இமுச போல... நீ எப்படி... நீயும் நடுப்பிள்ளயா...?”- அவனிடம் கேள்வி மாறும்.

வழக்கமாக அந்த தெருவில் முருகனும், அவ்வப்போது வந்து குல்பி ஐஸ் ஏவாரத்தை கிராஸ் செய்வான். அவர்கள் சினிமா தியேட்டரில் சந்தித்துக் கொண்ட நாளிலிருந்து அந்தத் தெருவுக்கு வருவதை முருகன் திட்டமிட்டுச் செய்யத் தொட்ங்கினான். ஹேமாவும் அவனும் நேருக்கு நேர் நிற்கிற சமயத்தில் சில நிமிடம் அவர்களருகே தானும் நிற்க ஆரம்பித்தான் ,’ஐஸ் யேவாரம் எப்படி .... அந்தத் தெருவுல ஒன்னியக் கேட்டாகப்பா போவலியா...’ – என்று ஏதாவது உளறுவான். ஹேமா அவனிடமிருந்து கிளம்பியதும் ,முருகனும் நடக்க ஆரம்பிப்பான்.

“ யே...இது பாவம்டா ...” என்று அவனது நண்பர்கள் முருகனை எச்சரித்தார்கள். முருகனோ “சத்தியமாய் நான் அந்த நோக்கத்தில் செய்யவே இல்லை” – என தன் கையிலேயே அடித்துச் சொன்னான்,’ரெண்டு பேரையும் சேத்துவக்கெத்தே பிரியப்படுறே... நாந்தான அவனுக்கு லவ்வு இருக்கதவே சொன்னேன்...”என்றவன் ,”சும்மா பேசிட்டே இருந்தா எப்படி... எங்கிட்டாச்சும் கூப்புட்டுப் போலாம்ல... எதியாச்சும் கிப்ட்டு மாதிரி வாங்கித்தரலாம்ல... லெட்ராச்சும் குடுத்தியா...” நிறையக் கிளறிவிட்டான்.

“வெளிய போன செலவு ...?”

“செலவு...! நீ தேம் பண்ணணும்...! லவ்வுனா சும்மாவா..”

“யே...சில சமயம் பொண்ணுங்களே பண்ணுவாங்கடா... அந்தப்பிள்ளயும் சம்பாரிக்கிதுல்ல.. அப்ப அதும் காசு கொண்டு வரும் ..”

“எங்காள்...லாம் அவதே செலவு பண்ணுவா.. நானெல்லாம் பைசா செலவு செஞ்சதில்ல...” – பெருமையாய் சொல்லி கொண்டான் பேக்கரிக் கடை செல்வம்.

அந்தப் பரீட்சைக்கு அவன் தயாராயில்லை, நாளெல்லாம் புளித்தட்டுகிற பிள்ளை ,ஒரு வேளை ,ஓய்வுக்காக – நேரம் போக்குவதற்காகக் கூட தன்னிடம் பேசிக் கொண்டிருக்கலாம், இவனுகள் சொல்கிறான்கள் என்று தப்பாய் எடுத்து... என பின் வாங்கினான் ஆனாலும் மனசு கேட்கவில்லை, சினிமா படத்தில் வருவது போல மனசுக்குள்ளேயே போட்டு வைக்காமல் ஆம்பளை தன்காதலை சொல்லவேண்டும்....துணிச்சலாய் வெளிப்படுத்திவிட வேண்டியதுதானே... வந்தா மலை போனா மயிரு....

முருகன் சொன்னது போல, பேன்ஸி ஸ்டோருக்குப் போய் ஒரு செட் வளையல் வாங்கினான். இருபத்தைந்து ரூபாய். கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது.

“இது உனக்கு சேருமா பாரு...”_ என்று ஹேமாவிடம் நீட்டிய போதுதான் கேட்டாள், ”நீ என்ன லவ் பண்றியா..?”

அதே கேள்வியையே ஹேமாவிடம் அவன் திருப்பி கேட்டான். ”நி ய் யீ..?”_ அதில் அவனுக்கு பெருமிதமாய் இருந்தது. இத்தனை தைரியம் எப்படி தனக்கு வந்தது. கொஞ்சம் வியர்க்கவும் செய்தது.

அந்த கேள்வியில் ஹேமா ஒரு நிமிடம் யோசிக்க வேண்டி இருந்தது. பிறகு, “தெரியல..”_ என்று ப்தில் சொன்ன போது அவனுக்கும் குழப்பம். தொடர்ந்து ஹேமா இன்னொரு கேள்வி கேட்டது. ” லவ் ப்ண்ணுனா... வெளில கூப்புடுவியா...?”

வாய் உத்டு வறண்டு போக பதில் சொன்னான், “ஆமா.. வெளீல போகணுமில்ல..”

“ ம்.. கேக்கறதெல்லா வாங்கித்தருவீ.. ல்ல..! “

தலையை மட்டிலும் அசைத்து ’ஆமாம்’ என்றான்.

“பெர்த்டே க்கு.. ட்ரெஸ் வாங்கித்தருவியா.. கேக் தருவியா..? “

தயங்காமலும் அதேசமயம் யோசிக்காமலும் பதில் தந்தான். “ரெண்டுமே..! ” சொல்லிவிட்டு சிரிக்கவும் செய்தான்.

“ கல்யாணம் செய்யச் சொன்னா...? “ அதைமட்டும் கிசுகிசுப்பாய் கேட்டாள் ஹேமா.

அவ்னுக்குள் ஒருமிரட்சி வந்துபோக, மறுபடி ஒருதரம் எச்சில்கூட்டி விழுங்கிக் கொண்டான். “ எங்கவீட்ல ஒரு அக்கா இருக்கு..! “ என்றான்.

“ எங்க வீட்லயுந்தா..! “ ஹேமாவும் சடாரெனப் பதில் சொன்னாள். சொன்ன நிமிடத்தில் சுபாவமாய் மறுபடியும் ஐஸ் பெட்டியினைத் திறந்து கைக்கொரு குல்பி ஐசை ஏந்திக் கொண்டாள்.

“சரி.. நானும் ஐ லவ் யு “ என்று தலையை ஒருவெட்டு வெட்டி கொண்டு ஐசுக்கு காசு கொடுக்காமல் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக